Shareholic

Tuesday, December 31, 2019

பாதத்தில் பிரச்சினைகள் தீர



பாதம் மிகவும் மென்மையான உறுப்பாகும். அதை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். வெளியில் சென்று விட்டு வரும் போது  பாதங்களை தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும். என்ன தான் செருப்பு மற்றும் ஷூக்கள் அணிந்திருந்தாலும், பாதங்களில் அழுக்குகளும் மற்றும் நுண்ணிய  கிருமிகளும்  சேருவதை நாம் மறுக்க முடியாது. கண்டிப்பாக குளிக்கும் போது, பாதங்களை நன்றாக அழுத்தி தேய்த்து அழுக்குகள்  சேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். பெரிய வெங்காயம் இரண்டு  துண்டுகளாக்கி விட்டு, அந்த துண்டுகளின் உதவியோடு பாதங்களை அழுந்த துடைப்பதன் மூலம், பாதத்தில் தேங்கி கிடக்கும் அழுக்குகளை வெளியேற்றலாம்; மற்றும் நுண் கிருமிகளும் மடிந்து விடும். தொடர்ந்து வெங்காயம் உபயோகித்து வர பாதங்கள் மென்மையாக மாற ஆரம்பிக்கும்.

தேமல் பிரச்சினைகள் தீர



தேமல் என்பது வட்ட வட்டமாக தோன்றும் ஒருவித குறைபாடு. இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு எந்தவிதமான இடையூறுகள் இல்லாவிட்டாலும், சருமம் பார்க்கும்பொழுது சில சமயங்களில் ஒருவித அசூயை தோன்றும். இது தோல் சம்பந்தமான ஒரு குறைபாடு தான். இதற்கு உள் மருந்து மற்றும் வெளி மருந்து உபயோகிக்கலாம். வெளி மருந்து என்ற வகையில் இந்த முறையை செய்து பாருங்கள். நல்ல பருமனான  பூண்டுகள் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தோல்கள் உரித்து உள்  பகுதியை  எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு வெற்றிலையை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். வெற்றிலையின் தண்டுகளை நீக்கிவிடுங்கள். இப்பொழுது உரித்த பூண்டு மற்றும் தண்டு நீக்கிய வெற்றிலையை நன்றாக சுத்தம் செய்து விட்டு அம்மியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து பின் அந்த கலவையை சருமத்தில் தேய்த்து சிறிது நேரம்  ஊறவைத்து பின்னர்  குளித்து வந்தால் படி படியாக தேமல் பிரச்சினைகள் நீங்க ஆரம்பிக்கும்.

வாழைப்பழத்தின் பயன்கள்



எல்லா இடங்களிலும்  கிடைக்கக்கூடிய பழம் வாழைப்பழம். (வட இந்தியாவில் அதிகம் கிடையாது) வாழைப்பழத்தில் பல வகைகள் இருக்கின்றன. இந்த பழத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் மிகவும் அதிகம். குறைந்த பட்சம், ஒரு பழமாவது தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது. மலச்சிக்கல் நீங்க; குடல் புண்கள் ஆற மற்றும் சருமம் சம்பந்தமான பிரச்சினைகள் தீர, வாழைப்பழங்கள் மிகவும் நல்லது. செவ்வாழை, கற்பூர வாழை, ரஸ்தாளி வகை பழங்கள், மலை வாழை பழங்கள் மிகவும் நல்லது.


பற்கள் பாதுகாப்புக்கு




இப்பொழுது  நாம்  கடைகளில் கிடைக்கும் வித விதமான பற்பசைகளை உபயோகிக்கிறோம். சில வருடங்களுக்கு முன்னால்   பல் துலக்க, கரித்தூளை உபயோகிப்பது உண்டு. பற்பசைகளை உபயோகிப்பதில் விருப்பம் இல்லாதவர்கள் இந்த முறையை கடைபிடித்து பார்க்கலாம். ஓரளவு மாவிலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றின் தண்டுகளை நீக்கி விடவேண்டும். இலைகளை நன்றாக சுத்தம் செய்து, காய வைத்து பொடி  செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை பற்பொடியை போல உபயோகிக்கலாம். பற்கள் உறுதியாகவும் சுத்தமாகவும் இருக்கும்.

தீராத விக்கல் பிரச்சினைக்கு



சிலருக்கு அடிக்கடி விக்கல் வரும். விக்கல் வந்தால் தண்ணீர் குடிப்பது வழக்கம். இல்லேயேல் நன்றாக மூச்சை இழுத்தும் விடலாம். இப்படி செய்தாலும் விக்கல் நிற்கவில்லை என்றால், இந்த முறையை கையாண்டு பார்க்கலாம். பெரிய நெல்லிக்காய்களை வாங்கிக்கொள்ளவும். அவற்றை நன்றாக சுத்தம் செய்தவுடன், துண்டு துண்டாக வெட்டி, கொட்டைகளை நீக்கிவிடவேண்டும். துண்டுகளை நன்றாக இடித்து சாறு பிழிய வேண்டும். அந்த சாறுடன், சுத்தமான தேனை கலந்து, அதை அடிக்கடி சாப்பிட்டு வர விக்கல் பிரிச்சினைகள் தீரும். மேலும், தேனில் உள்ள   இரும்புச்சத்து உடலுக்கு  நல்லது. நெல்லிக்காயில் உள்ள புளிப்பு நீர் வயிற்று பிரிச்சினைகளை தீர்க்கும்.

முகப்பரு நீங்க



கறிவேப்பிலை எடுத்துக்கொள்ளுங்கள். அதை கழுவி சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவு மஞ்சள் எடுத்துகொண்டு  அம்மியில் நன்றாக அரைத்து, முகத்தில் நன்றாக தடவி சிறிது நேரம்  ஊறப்போட்டு பின்னர் குளித்து வர, முகப்பரு மற்றும் அதனால் ஏற்பட்ட தழும்புகள் விரைவில் மறைந்து விடும்.

இருமல் குணமாக



பசும் பால் வாங்கவும். பசும் பால் கிடைப்பது மிகவும் அரிது. அதை நன்றாக  சுண்ட  காய்ச்சவும்.  காய்ச்சி இறக்கியபின், அதில் சிறிதளவு மிளகு தூளை சேர்க்கவும். சுவைக்காக சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளவும். இப்பொழுது அந்த பாலை  குடித்து வர, இருமல் விரைவில் நின்று நிவாரணம் கிட்டும். பனங்கற்கண்டு மிகவும் நல்லது.